தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக்கோரி நேட்டோ அமைப்பிடம் யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.
அந்த கோரிக்கையை நேட்டோ ஏற்று யுக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்கத்தடையென அறிவித்தால், பயணிகள் விமானம், சரக்கு விமானம், போர் விமானம் என எந்த வித விமானங்களும் யுக்ரைன் வான்பரப்பில் பறக்கக் கூடாது.
இது ரஷ்ய போர் விமானங்கள் யுக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க உதவும். மேலும், இந்த தடையை மீறிய எந்த விமானங்களையும் நேட்டோ படைகள் சுட்டுவீழ்த்தலாம்.
ஆனால், தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக்கோரி யுக்ரைன் ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக நேட்டோ தலைவர் ஸ்டோலன்பெர்க் கூறுகையில், வான்பரப்பில் பறக்கத்தடை நடைமுறையை அமல்படுத்த ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. நேட்டோ போர் விமானங்களை யுக்ரைன் வான் எல்லைக்குள் அனுப்பி ரஷ்ய போர் விமானங்களை சுட்டுவீழ்த்தி ‘விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி’ என அறிவிப்பது தான் இதற்கான வழி.
நாம் அதை செய்தால் அது அதிக நாடுகளை உள்ளடக்கி, பெருமளவு உயிர் இழப்புகளை ஏற்படுத்தி ஐரோப்பாவை முழுமையான போருக்கு கொண்டு செல்லும்’ என கூறி யுக்ரைன் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
தங்கள் நாட்டின் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க நேட்டோ மறுப்பு தெரிவித்ததற்கு யுக்ரைன் ஜனாதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், யுக்ரைன் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பவர்கள் ரஷ்யாவுடன் மோதுபவர்களாக கருத்தப்படுவர் என்று ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விமானப்படையின் பெண்கள் பிரிவினர் இடையே இன்று கலந்துரையாடிய புடின், யுக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கும் 3 ஆம் தரப்பினர் இந்த ஆயுதச்சண்டையில் பங்கேற்கேற்பவர்களாக கருத்தப்படுவர்.
நமது பாதுகாப்பு படையினருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் யாரேனும் அந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்பட்சத்தில், அவர்கள் எந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தாலும் அந்த நொடியே அவர்கள் இந்த ராணுவ சண்டையில் பங்கேற்பவர்களாக ரஷ்யாவால் கருத்தப்படுவர் என்றார்.