வெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களை இலக்கு வைத்து முச்சக்கர வண்டி சாரதிகள் பாரிய மோசடியில் ஈடுபட்டு வருகின்றமை அம்பலமாகி உள்ளது.
சாரதி ஒருவரினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் ஒருவர், அதனை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதிகள் மேலும் சிலருடன் இணைந்து குழுவாக இந்த மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நியூசிலாந்தில் இருந்து கொழும்பு வந்த சுற்றுலா பயணியான Karl Rock என்பவர் இந்த மோசடியை அம்பலப்படுத்தியுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் கொழும்பு நகரின் முக்கிய இடங்களை சுற்றிக்காட்ட தான் உதவுவதாக நபர் ஒருவர் கூறுகின்றார். அதற்காக வீதியில் செல்லும் முச்சக்கர வண்டியை அழைப்பது போன்று தங்களுடைய மோசடிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட முச்சர வண்டியை அழைக்கின்றார்.
அதில் ஏறிய பின்னர் இரத்தினக்கல் விற்பனை செய்யும் இடங்களுக்கு அழைத்து சென்று பெரிய தொகையில் அதனை வெளிநாட்டவர்களுக்கு வழங்க முயற்சிக்கின்றார்கள். அதிலும் ஒரு பகுதி தொகை இந்த மோசடியாளர்களுக்கு வழங்கப்படுகின்றது.
எனினும் வெளிநாட்டவர் தனக்கு இரத்தினகல் வேண்டாம் என கூறியவுடன் சிறிய அளவு தூரம் பயணிப்பதற்கு 4,800 ரூபாய் முச்சக்கர வண்டி கட்டணம் கோருகின்றார்கள்.
இந்த மோசடியை நன்கு அறிந்த வெளிநாட்டவர் அந்த தொகையை கொடுக்க மறுப்பதுடன் 600 ரூபாவை மட்டும் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தை காணொளியாக பதிவிட்டு அவரது யூடியுப்பில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இதுபோன்ற மோசடிகள் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு பாரியதொரு பதிப்பாக அமையும் என்பது மறுக்க முடியாத உண்மை.