உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு ஐந்தாவது நாளாக இன்று இரு நாடுகளின் பிரதிநிதிகளும் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.
பெலாரஸ் எல்லையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் மற்றும் ரஷ்ய படைகளை திரும்பப் பெற வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமைதி பேச்சுவார்த்தைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய பிரதிநிதி விளாதிமிர் மெடின்ஸ்கி, இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரு உடன்பாட்டை எட்ட விரும்புவதாக கூறினார்.
இதற்கிடையே பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு, ரஷ்ய படைகள் தங்கள் ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் உக்ரைன் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக உக்ரைனுக்கான உறுப்புரிமையை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.