பாகிஸ்தான் - சியல்கொட் நகரில் தாக்கி கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடன இறப்பதற்கு முன்னர் பதிவான சில காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அதில் அவர் பணியாற்றிய தொழிற்சாலையில் ஒட்டப்பட்டிருந்த மதம் சார்ந்த பதாகைகளை அகற்றும் வகையிலான புகைப்படம் ஒன்றும், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர் குறித்த தொழிற்சாலையின் கூரையின் மேல் ஏறும் காணொளியொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரியந்த தியவடனவின் குடும்பத்திற்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் அண்மையில் 25 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.
அவரின் பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளுக்கான செலவினை பாகிஸ்தானில் அவர் பணியாற்றிய தொழிற்சாலை ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேநேரம், இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள 85 பேரை தொடர்ந்து 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க குஜரன்வாலா பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் கடந்த 3 ஆம் திகதி உத்தரவிட்டது.