கண்டி - இலுக்மோதர பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மகாவலி கங்கையில் வீழ்ந்து விபத்துக்குள்ளான கார் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போயிருந்த நபரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற பகுதியில், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் பின்னர், குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பேருடன் பயணித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கண்டி - இலுக்மோதர பிரதேசத்தில், மகாவலி கங்கையில் நேற்றிரவு 10.30 அளவில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து அதில் பயணித்த இரண்டு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சிகிச்சைகளின் பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேறியுள்ளனர்.
எனினும், விபத்துக்குள்ளான கார் மற்றும் அதில் பயணித்த மற்றொரு நபரும் காணாமல்போயிருந்த நிலையில், தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று பிற்பகல் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டதுடன், விபத்துக்குள்ளான காரும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.