'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணிகள் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் வலம்புரி மண்டபத்தில் இதற்கானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
சட்டத்தரணிகள், தொழில் வல்லுநர்கள், மதத் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சட்டத்தை சம அளவில் செயற்படுத்துவது தொடர்பில் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களை கேட்டறிவது, இந்த ஜனாதிபதி செயலணியின் நோக்கமாக உள்ளது.
அதே போன்று நாளைய தினம் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதனையடுத்து எதிர்வரும் நாட்களில் ஏனைய எட்டு மாகாணங்களிலும் உள்ள மக்களின் கருத்துக்களை கேட்டறிய எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்த செயலணி நேற்றைய தினம் வவுனியாவிலும் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணிகளை முன்னெடுத்தது.
குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வந்திருந்தவர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.