விளையாட்டு விடயத்தில் ஒழுக்கத்தில் விட்டுக்கொடுத்து போகப்போவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் மென்மையாக நடந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சிகள் அமைச்சரிடம் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உயிர் பாதுகாப்பு குமிழியை மீறியதற்காக தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் சென்ற ஜூலை மாதம் முதல் ஒரு வருட ஆட்டத் தடை விதித்தது. மேலும் இவர்களுக்கு 10 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மூன்று துடுப்பாட்ட வீரர்களும் மீண்டும் விளையாட்டுக்கு திரும்பவும் அடுத்த உலகக் கிண்ணத்திற்கு தயாராகவும் அனுமதிக்குமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
எவ்வாறாயினும், ஒழுக்கமின்மையே கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியை சந்திக்க காரணமாக அமைந்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கிரிக்கெட் வீரர்கள் அல்லது நிர்வாகத்துடன் ஒழுக்கத்தில் சமரசம் செய்ய தயாராக இல்லை என்று அவர் இதன்போது உறுதிபட கூறினார். (யாழ் நியூஸ்)