கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதியை மீளத் திறப்பதா? இல்லையா? என்ற தீர்மானத்தை நாளைய தினம் அறிவிக்கவுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மகிந்த எஸ் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் நிலவும் வானிலை மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் ஆலோசனை ஆகியனவற்றை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மண்சரிவு அபாயம் நிலவுவதன் காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதி கடந்த 9ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது.
அதேநேரம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவக அதிகாரிகள் கடுகண்ணாவ பகுதியில் இன்றைய தினம் ஆய்வினை மேற்கொண்டிருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது, மண்மேட்டில் மழை நீரின் அழுத்தத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பிரதான மார்க்கத்தின் தொடருந்து போக்குவரத்து வெயாங்கொடை வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.
பல்லேவல மற்றும் மீரிகம தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான மார்க்கத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது தொடருந்து மார்க்கத்தில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.