கட்சியின் உச்சபீட ஏகமானதான முடிவை மீறி செயல்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மீண்டும் மன்னிப்பா??
இம்முறை வரவு செலவு திட்டத்தின் வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எதிர்த்து வாக்களித்த நிலையில், உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
இது சம்பந்தமாக இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்ன கட்சியின் தலைவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கட்சியின் செயலாளர் இது சம்பந்தமாக கேட்ட கேள்வி ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது.
"ஒழுக்காற்று நடவடிக்கைக்கு முதல் அவர்களிடம் இதற்கான காரணம் கேட்டறியப்பட வேண்டும் எனவும், சிலவேளை அவர்களும் வைக்கும் காரணங்கள் சரியாக இருக்கலாம் எனவும், அவர்களின் வாதப்படி வரவு செலவு திட்டத்தை எதிர்த்தது பிழையாக இருக்கலாம்" எனவும் கூறினார் .
மேலும் "கட்சியின் செயலாளர் என்ற வகையில், கட்சியின் நிலைப்பாடு இது தான் என்பதை தன்னால் கூறமுடியாது" எனக் குறிப்பிட்டது இங்கு குறிப்பிடத்தக்க, வியப்புக்குரிய அம்சமாகும்.
இதிலிருந்து அடுத்த கட்டமாக இவர்களுக்கான உச்சபீட மன்னிப்பு வெளியாகும் என்பதை ஊகிக்க முடிகின்றது.
மேலும் 20 ஆம் திருத்த சட்ட மூலத்திற்கு அவர்கள் வாக்களித்தது தவறாயினும் ஜனாஸா எரிப்பை அவர்கள் காரணமாக முன்வைத்தனால் தலைவர் அவருக்குரிய அதிகாரத்தை வைத்து அவர்களை மன்னித்ததாகவும் குறிப்பிட்டார்.
ஆனால் கட்சியின் ஏகமனதான முடிவின்படி தாம் 20ஆம் திருத்தச் சட்ட மூலத்திற்கு வாக்களித்ததாக உறுப்பினர்கள் அப்போது குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
-பேருவளை ஹில்மி