தேவாலயங்கள் மீது மீண்டும் தாக்குதல்! கடற்படை சீருடை அணிந்துவந்து ஆலயங்களுக்கு எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேவாலயங்கள் மீது மீண்டும் தாக்குதல்! கடற்படை சீருடை அணிந்துவந்து ஆலயங்களுக்கு எச்சரிக்கை!

சிறில் காமினி

ஈஸ்டர் ஞாயிறு தின குண்டு தாக்குதல் இடம்பெற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தேவாலயங்களுக்கு மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படும் விடயத்தை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது.


இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். ஞானசார தேரரும் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுமென கூறியிருந்த நிலையில், தற்போது இலங்கை கடற்படையினரும் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படக்கூடும் என கூறியுள்ளதை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது.


இலங்கை கடற்படையினர் தவறுதலால் நடந்தவொன்று என உஸ்வெட்டகேயாவ கடற்படை முகாமினர் கூறியுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் இலங்கை கடற்படை இராணுவத்தளபதி, மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குலுக்கு நீதி கோரும் குழுவின் உறுப்பினரான அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.


இலங்கை கடற்படையினரால் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படக்கூடும் என கூறிய விடயம் தொடர்பில் கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில்,


"கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து மீண்டுமொரு முறை ஏதேனும் வகையில் தாக்குதல் நடத்தப்படும் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், குருவானவர்கள் போல் உடையணிந்து வருவர்கள் குறித்து அவதானம் செலுத்தும்படியும் இலங்கை கடற்படையின் வெலிசரை முகாமைச் சேர்ந்தவர்கள் போப்பிட்டி, வெலிகம்பிட்டி, வத்தளை, ராகம ஆகிய ஆலயங்களுக்கு காலை வேளையில் அறிவித்துவிட்டுச் சென்றுள்ளனர். 


எனினும், இலங்கை கடற்படையினர் இது தவறுதலாக நடந்த விடயம் என மாலை வேளையில் குறித்த ஆலயங்களுக்கு கூறியுள்ளனர்.


எமக்குள்ள மிக பிரதான பிரச்சினை என்னவென்றால், இந்த சம்பவத்தை  தவறுதலாக நடந்த விடயம் என தற்போது எதற்காக கூறுகிறார்கள்? இது தேசிய பாதுகாப்பு பிரச்சினைக்குரிய விடயமாகும். இந்த மீண்டும் தாக்குதல் என்பது தேவாலயங்களை மாத்திரம் இலக்கு வைத்து நடத்தப்படவுள்ளதா? ஏனெனில், உயிர்த்த தின தாக்குதல்களின்போது நட்சத்திர ஹோட்டல்களும் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. மேலும், இந்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சுக்கோ அல்லது புலனாய்வு துறைக்கோ அல்லது கர்தினாலுக்கோ தெரிவிக்காதது ஏன்? என பல கேள்விகள் எழுகின்றன.


நிச்சியமாக இவ்விடயத்தை தவறுதலாக நடந்த விடயம் என கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. தவறுதல் என கூறுவதாயின் அந்த தவறுதல் என்ன  என்பதை விளக்க ‍வேண்டும். இதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாது பாதுகாப்பு துறையினர் தேடிப்பார்க்க வேண்டும். பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வுத் துறையினர் கட்டாயமாக இது தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும். அத்துடன் தேவாலயங்களுக்கு பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.


எவ்வாறாயினும், மீண்டும் ஒரு தாக்குதல் என்பதை அவர்கள் காரணமில்லாமல் வெறுமனே கூறியிருக்க மாட்டார்கள். என்ன காரணத்துக்காக அவர்கள் அவ்வாறு கூறினார்கள்? அவர்களுக்கு கட்டளையிட்டது யார்? அதன்பின்னர் தவறுதலாக நடத்த விடயம் என கூறுவது தொடர்பில் கட்டாயமாக ஆராயப்பட வேண்டும்.


இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு பொறுப்புக் கூற வேண்டும். ஏனெனில், இதுபோன்ற பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களை கர்தினாலுக்கு யார் அறிவிப்பது தொடர்பில் தெளிவுபடுத்த ‍வேண்டும். அப்படி எவரெனும் ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்படும்போது அவரிடமிருந்து ‍பெறும் தகவல்களின்படி செயற்பட முடியும்.


மேலும், ஞானசார தேரரரும் அண்மையில் மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடத்தப்படும் எனவும், அதனை யார் நடத்துவார்கள் என்ற தகவல் தம்மிடம் இருப்பதாக கூறியிருந்தார். அவ்விடயம் தொடர்பிலும் பாதுகாப்புத் துறையினர் கவனமெடுக்க வேண்டும். இது தொடர்பான கடிதமொன்றை கர்தினால் ஆண்டகை அவர்கள் , பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றை கடந்த 22 ஆம் திகதியன்று அனுப்பியிருந்தபோதும் அதற்கு பதில் இதுவரை கிடைக்கவில்லை என்றார்.


போப்பிட்டி உள்ளிட்ட தேவாலயங்களுக்கு வருகை தந்து தகவல் தெரிவித்த இலங்கை கடற்படையினர் சீருடை அணிந்தா வருகை தந்திருந்தனர் என வீரகேசரி கேட்டதற்கு,


தகவல் தர வருகை தந்தவர்கள் இலங்கை கடற்படை சீருடை அணிந்து வந்தே மேற்படி தகவல்களை தெரிவித்தனர். அதற்கான காணொளிக் காட்சிகள் எம்மிடம் உள்ளன. போப்பிட்டி, வெலிகம்பிட்டி ஆலயங்கள் கடற்கரைக்க அண்மித்தே காணப்படுகின்றன. இந்த தாக்குதல் வெறுமனே தேவாலயங்களுக்கு மாத்திரமா அல்லது சுற்றுலா இடங்களுக்குமா என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் சில மாதங்களாகவே தேவாலயங்கள் ‍பூட்டியே கிடக்கின்றன. இங்கு பக்தர்கள் வருவதும் இல்லை. ‍


வழிபாடுகள் நடத்தப்படுவதுமில்லை. எனினும், எமது பகுதி சுற்றுலாத்துறையினர் அதிகம் வந்துபோகும் இடமாகும். இங்கு ஹோட்டல்கள் அதிகமாக காணப்படுகின்றன. எதிர்வரும் காலத்தில் நத்தார் பண்டிகையும் வரவுள்ளது.


ஆகவே, இந்த தாக்குதல் சுற்றுலாத் துறையினரையும் பாதிக்குமா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஜா-எல பகுதி கடற்கரையோர பகுதிக்கு பொறுப்பான அருட் தந்தை சாந்த சாகர ஹெட்டியாராச்சி பதிலளித்தார்.


-எம்.எம்.சில்வெஸ்டர்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.