பயங்கரவாதத்தடைச் சட்டத்தை மீளாய்விற்குட்படுத்தல் குறித்து பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஹனா சிங்கருக்கு இடையிலான சந்திப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயங்கரவாதத்தடைச் சட்டத்தை மீளாய்விற்குட்படுத்தல் குறித்து பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஹனா சிங்கருக்கு இடையிலான சந்திப்பு!


பயங்கரவாதத்தடைச் சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்தல், சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலை மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதிக்கும் இடையிலான சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளது.


பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்னவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (23) கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.


இதன்போது சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புக்களை முடக்குவதற்காக பாதுகாப்பு அமைச்சின் ஊடாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்குத் தனது பாராட்டை வெளிப்படுத்திய ஐ.நா வதிவிடப்பிரதிநிதி, இந்த நடவடிக்கைகள் இலங்கை உள்ளடங்கலாகப் பிராந்திய நாடுகள் அனைத்திற்கும் மிகவும் சாதகமானதாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்ததாக பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் அண்மைக்காலத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பான ஹனா சிங்கருக்கு விளக்கமளித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவருவதற்குத் திட்டமிடப்பட்ட சுமார் ஒரு டொன் அளவிலான போதைப்பொருட்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாகவும் எடுத்துரைத்தார் என்றும் அதுமாத்திரமன்றி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்விற்கு உட்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை இச்சந்திப்பு தொடர்பில் ஐ.நா வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார்.


'போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காக வழங்கக்கூடிய செயற்திறன்வாய்ந்த மருத்துவ உதவிகள் தொடர்பில் பாதுகாப்புச்செயலாளருடன் கலந்துரையாடிய அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கும் என்றும் குறிப்பிட்டேன். 


அதுமாத்திரமன்றி சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை உயர்வினால் அதிகரித்துவரும் நெருக்கடிநிலை குறித்தும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்துவது குறித்தும் பேசினேன். 


மேலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை வலுப்படுத்துவதென்பது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் பூகோளரீதியான பயங்கரவாதத்தைத் தடுப்பதற்குமான சிறந்த ஆயுதமாகும்' என்று ஹனா சிங்கர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


அத்தோடு போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிப்பதற்கு அவசியமான சுகாதார மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


-நா.தனுஜா


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.