
பொத்துவில் - அருகம்பை பகுதியில் சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த வெளிநாட்டவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த 43 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் இலங்கைக்கு வந்த இந்நபர், ஹிக்கடுவை பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்துள்ள நிலையில் கடந்த 22ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த தனது சாரதியுடன் அவர் அருகம்பை பகுதிக்கு சென்றுள்ளார்..
அதன்போது, வெளிநாட்டவர் ஒரு அறையிலும், அவருடைய சாரதி வேறொரு அறையிலும் தங்கியிருந்துள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி இரவு வேறொரு விருந்தகத்தில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட இந்நபர் மறுநாள் தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பியுள்ளார்.
இதற்கிடையில், குறித்த நபரின் தொலைபேசி இணைப்பில் இல்லை என அவரது மனைவி, சாரதிக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, சாரதி அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நீதிவான் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டதையடுத்து, சட்டவைத்திய அதிகாரியும் சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளார்.
பின்னர் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.