நாட்டில் பால் மா, சமையல் எரிவாயு, அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளரான பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
எனினும் உலக சந்தையில் காணப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு விநியோகம் தொடர்பான நெருக்கடி, இலங்கைக்குள் டொலரின் விலை அதிகரிப்பு என்பன காரணமாக எதிர்காலத்தில் சில தீர்மானங்களை எடுக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் ஒரு எரிவாயு நிறுவனம் விலையை அதிகரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்த போது அதற்கு இடமளித்ததால், மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.
நுகர்வோர் மற்றும் விநியோகஸ்தர் ஆகிய இரண்டு தரப்பை பாதுகாக்கும் வகையில் நடுநிலையான தீர்மானத்தை எடுக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.