இதுவரை தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத கர்ப்பிணி தாய்மார் தமது பிரதேச குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் அல்லது சுகாதார வைத்திய அலுவலகங்களுடன் தொடர்புகொண்டு தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
தெற்காசிய நாடுகளில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி ஏற்றிய முதலாவது நாடாக இலங்கை மாறி இருப்பதாகவும் சித்திரமாலி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) நடைபெற்ற "இலங்கையில் தடுப்பூசி ஏற்றலின் போதைய நிலை" தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் அவர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
கர்ப்பிணி தாய்மார்களுக்கு விசேட முறையின் கீழ் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது. தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் 13 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இது மொத்த சனத்தொகையில் 63 சதவீதம் ஆகும், 2 தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 51 சதவீதத்தையும் தாண்டி உள்ளது என்று கூறினார்.
மேலும் நாட்டில் இதுவரையில் சுமார் 5,000 கர்பிணிகளுக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட் தொற்றுறுதியான கர்ப்பிணிகளில் பிரசவத்தின் பின்னர் இதுவரையில் 3 சிசுக்களுக்கு மாத்திரமே தாயிடமிருந்து தொற்று ஏற்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் குடும்பநல மேம்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
தாய்ப்பால் ஊட்டல் மூலம் கொவிட் தொற்றுக்குள்ளான தாயிடமிருந்து குழந்தைக்கு தொற்று ஏற்படாது என்பதை உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெஃப் என்பன உறுதிப்படுத்தியுள்ளதாகவும் வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா சுட்டிக்காட்டினார்.