சிவப்பு எச்சரிக்கையிலிருந்து விடுபட்ட இலங்கை; சுகாதார அமைச்சு மக்களிடம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிவப்பு எச்சரிக்கையிலிருந்து விடுபட்ட இலங்கை; சுகாதார அமைச்சு மக்களிடம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!


கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களில் சாதகமான  பெறுபேறுகள் கிடைத்துள்ள நிலையில் டெல்டா வைரஸ் பரவலை தொடர்ந்து  விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கையில் இருந்து நாடு விடுபட்டு வருவதாகவும், எனினும் தொடர்ச்சியான சுகாதார வழிகாட்டலை பொதுமக்கள் பின்பற்றியாக வேண்டும் எனவும் சுகாதார அமைச்சின் கொவிட் வைரஸ் பரவல் செயற்பாடுகளின் பிரதான தொடர்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.


நாடளாவிய கொவிட் வைரஸ் கட்டுப்பாட்டு நிலைமைகள் மற்றும் நாடு திறக்கப்பட்ட பின்னரான அச்சுறுத்தல் நிலைமைகள் குறித்து தெரிவிக்கும் போதே இதனை அவர் ,


நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் வெகுவாக குறைவடைந்துள்ளது. புதிய வைரஸ் தொற்றாளர்கள் உருவாகும் வீதமானது வெகுவாக குறைவடைந்துள்ளது, அதேபோல் நாட்டில் 53 வீதமான பொதுமக்களுக்கு கொவிட் வைரஸ் தடுப்பூசி ஏற்றப்பட்டு எமது இலக்கை நாம் அடையும் நிலையை எட்டியுள்ளோம். 


குறிப்பாக கூறுவதாயின் நாட்டில் மொத்த சனத்தொகையில் 65 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றுவதன் மூலமாக புதிய சாதாரன நிலைமையில் நாட்டை திறக்க முடியும் என்பதே வைத்திய தரப்பின் ஆலோசனையாகும். 


அதற்கமைய வேகமாக தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்துள்ளோம். ஆசியாவில் வேகமாக தடுப்பூசியை பெற்றுக்கொடுக்கும் நாடுகளில் இலங்கை முன்னணியில் உள்ளது.


தடுப்பூசியை துரிதமாக பெற்றுக்கொடுத்துள்ள காரணத்தினால் கொவிட் மரணங்களை குறைக்கவும், தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் சாதகமாக அமைந்துள்ளது. 


தற்போதுள்ள தரவுகளுக்கு அமைய புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 50-60 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக வெளிப்படுகின்றது.


கொவிட் மரணங்களை பொறுத்தவரையில் 50 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தரவுகள் வெளிப்படுத்துகின்றது. 


ஒட்சிசனை பெற்றுக்கொண்டு அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு அனுமதிக்கப்படும் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 70 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.


அதேபோல் நாடளாவிய ரீதியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள மொத்த கட்டில்களில் 45 வீதமான கட்டில்களே நிரம்பியுள்ளன. ஆகவே புதிதாக கொவிட் வைரஸ் தொற்றாளர்களை அனுமதிக்க சுகாதார கட்டமைப்பில் எந்த நெருக்கடி நிலையம் இல்லை. 


வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் இலக்கை நோக்கி வெற்றிகரமாக நாம் நகர்கின்றோம். எனினும் இலக்கை நோக்கி நகர்வது இலகுவானது, ஆனால் வெற்றியை தக்க வைப்பது மிகக்கடினமான விடயமாகும். 


தற்போது நாம் கொவிட் வைரஸ் பரவல் சிவப்பு எச்சரிக்கையில்  இருந்து விடுபட்டுவிட்டோம். ஆனால் இந்த சவால்களை தக்கவைக்க நாம் மக்களின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.


அடுத்த மாதம் நாடு திறக்கப்பட்டாலும் கூட சுகாதார வழிகாட்டிக்கு அமைய இறுக்கமான  சுகாதார வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டியுள்ளது. மக்கள் நீண்ட காலத்திற்கு எமக்கு ஒத்துழைப்புகளை வழங்கி சகலரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே நாம் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். 


பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டவுடன் மக்கள் வழமையான செயற்பாடுகளை முன்னெடுக்காது சுகாதார தரப்பின் வலியுறுத்தல்கள் அனைத்தையும் முழுமையாக பின்பற்றி செயற்பட வேண்டும் என்றார். 


-ஆர்.யசி


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.