இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலை அதிகரிப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் நாளை (22) கூடவுள்ள வாழ்க்கை செலவுகள் தொடர்பிலான கூட்டத்தில் எடுக்கப்படும்.
உலக சந்தையின் விலையேற்றத்திற்கு அமைய தேசிய மட்டத்தில் விலையில் சிறிதேனும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பால்மா விலையேற்றம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிப்பட்டமை, கப்பல் போக்குவரத்து செலவு, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி உள்ளிட்ட காரணிகளை கருத்திற்கொண்டு இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதி நிறுவனத்தினர் கடந்த 18 ஆம் திகதி நிதியமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பெக்கட்டின் விலையை 350 ரூபாவினால் அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
350 ரூபாவினால் விலையை அதிகரிக்க முடியாது என்று நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளதுடன், 200 ரூபாவினால் அதிகரிக்க நிதியமைச்சு இணக்கம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் விலையேற்றத்திற்கு இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அனுமதி வழங்கப்படவில்லை.
பால்மா,கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலை அதிகரிப்பு தொடர்பிலான தீர்மானம் நாளை எடுக்கப்படும். உலக சந்தையின் விலையேற்றத்திற்கு அமைய தேசிய மட்டத்தில் விலையில் சிறிதேனும் மாற்றம் ஏற்பட வேண்டும்.
பால்மா விலையேற்றம் தொடர்பிலான இறுதித் தீர்மானம் நாளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ள வாழ்க்கை செலவுகள் தொடர்பிலான கூட்டத்தில் எடுக்கப்படும்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் தற்போதைய விலை 945 ரூபாவாக காணப்படுகிறது. 200 ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்டால் 1,145 ரூபாவிற்கு ஒரு கிலோகிராம் பால்மா விற்பனை செய்யப்படும் என்றார்.
-இராஜதுரை ஹஷான்