
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது கருத்துக்களை தெரிவிக்கவும் முஸ்லிம்களது உரிமைகளை பாதுகாக்க கௌரவ நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களால் எடுக்கப்பட்ட முன்னெடுப்புக்களை அறிந்துகொள்ளவும் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் ஃபத்வாக் குழு உறுப்பினர்களும் கௌரவ நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நேற்று (14) இரவு 8.15 முதல் 10.00 வரை Zoom ஊடாக நடாத்தினர்.
இதில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் மாற்றங்கள் தொடர்பாக பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் அண்மையில் இது தொடர்பில் அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பற்றியும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இதில் மார்க்க ரீதியான பல விடயங்கள் பற்றியும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் பற்றியும் கௌரவ நீதி அமைச்சர் அவர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
இதன் மூலம் சிறந்த பெறுபேறுகள் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட வேண்டும் என்றும் நீதி அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் நாட்டுக்கும் சமூகத்திற்கும் பிரயோசனமாக அமைய வேண்டும் என்றும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் ஜம்இய்யா பிரார்த்திக்கின்றது.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா