பயணக்கட்டுப்பாட்டு இடையே வாகனங்களுக்கான அனுமதியை வழங்குவதற்கு பொலிஸார் அறிமுகப்படுத்திய ஸ்டிக்கர் முறை தொடர்பில் அரசாங்கத்திற்குள் குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கடந்த 06ஆம் திகதி இந்த ஸ்டிக்கர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
முதல் நாளிலேயே 70 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்டிக்கர்கள் வாகனங்களுக்கு ஒட்டப்பட்டுள்ளன.
இருப்பினும் அதனால் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்த ஸ்டிக்கர் முறையை நிறுத்தும்படி கட்டளையிட்டதாக தெரியவந்துள்ளது..
அதிகளவிலான தொலைபேசி அழைப்புக்கள் வந்து தன்னிடம் பலரும் முறையிட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
உடனே அவர் விரைந்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹணவிடம் விடயத்தை தெரிவித்து தற்காலிகமாக நிறுத்தியிருக்கின்றார்.
ஜனாதிபதி இவ்வாறு ஸ்டிக்கர் முறையை நிறுத்த கூறிய விடயம், பொலிஸ் விவகார அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு அதன் பின்னரே தெரியவந்ததை தொடர்ந்து ஜனாதிபதியை உடன் சந்தித்த அவர் திட்டத்தை விளக்கப்படுத்தியதன் பின்னரே தற்காலிக அனுமதியை அதற்காக அவர் பெற்றுக்கொண்டார் என்று கூறப்படுகின்றது.
இந்த ஸ்டிக்கர் திட்டமானது பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், அமைச்சர் சரத் வீரசேகர, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண ஆகியோர் தலைமையில் முன்வைக்கப்பட்ட முறை என்பது குறிப்பிடத்தக்கது.