அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமானது இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களை ஒன்றிணைத்து, இளங்கலை பட்டதாரி மாணவர்களினது நலனிற்காக செயற்பட்டு வருகின்றது.
இவ்வமைப்பானது இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்தியில், முஸ்லிம் மாணவர்களை பிரதிநிதித்துவம் செய்வதுடன் அம்மாணவர்களின் உரிமைகள் மற்றும் தேவைகளுக்காக ஓர் அளப்பரிய சேவையை செய்கின்றது என்றால் மிகையாகாது. இவ்வகையில் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமானது பல்கலைக்கழக மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் வகையில் பல செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அச்செயற்றிட்டங்களில் மிக முக்கியமான ஒன்றே “Article Writing” எனும் செயற்றிட்டம் ஆகும்.
“Article Writing” செயற்றிட்டமானது அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்டது, பல்கலைக்கழக மாணவர்களினது மறைந்துள்ள எழுத்தாற்றலை வெளிக்கொண்டுவருவதற்கு ஒரு களத்தை அமைத்து கொடுக்கும் நோக்கிலாகும். இச் செயற்றிட்டமானது அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டு குழு உறுப்பினரும் AUMSA வின் மேற்கு பிராந்திய ஒருங்கிணைப்பாளருமான அர்கம் முனீர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டு குழு உறுப்பினரும் (Chief Media) பெண்கள் பிரிவு ஊடக ஒருங்கிணைபாளருமான ஷஸ்னா ஷுக்ரி என்போரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வகையில் இவர்களின் சிறந்த நிர்வாகத்தின் வழிக்காட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்றிட்டம், இலை மறை காயாய் இருந்த மாணவர்களுக்கும், ஆற்றலிருந்தும் தகுந்த களமில்லாமல் காத்திருந்த மாணவர்களுக்கும் கைக்கொடுத்தது என்றால் தவறில்லை. பல்கலைக்கழக மாணவர்கள் தமது சொந்த கருத்துக்களையும் சமகாலத்தில் நிகழும் நிகழ்வுகள் தொடர்பான தமது மனதில் தோன்றும் எண்ணங்களையும் எழுத்தாக்குவதற்கு இச்செயற்றிட்டம் வழிவகுத்து கொடுத்தது. இதன் ஆரம்ப கட்ட செயற்பாடானது "கொவிட்-19" கால ஆரம்ப சூழ்நிலையிலேயே தனது முதல் அடியை வைத்தது.
இச்செயற்பாட்டின் ஆரம்ப கட்டமாக, அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் அமைப்பிற்கு தன்னார்வ தொண்டாளர்களாக சேவையாற்ற சுய விருப்பமுடைய மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களில், Article Writing ற்கு விருப்பமுடைய மாணவர்கள் ஆண், பெண் என இரு வட்ஸப் குழுக்களில் இணைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து, சமகால தொடர்பிலான தலைப்புக்கள் மற்றும் முக்கியமாக சமூகத்தில் பேசப்பட வேண்டிய தலைப்புக்கள் மும்மொழியிலும் அக்குழுக்களில் பகிரப்பட்டு, அதில் மாணவர்கள் தெரிவு செய்யும் தலைப்புகளில் மும்மொழியிலான ஆக்கங்கள் சேகரிக்கப்பட்டு, அவை தகுந்த தகைமைகளுடைய ஒரு சிறந்த மத்தியஸ்தர்கள் உள்ளடங்கிய ஒரு குழுவின் மேற்பார்வையின் கீழ் பரிசீலனை செய்வதுடன் அதனை தொடர்ந்து அவை பத்திரிகைகள் மற்றும் வலைத்தளங்களுக்கு அதாவது, மாணவர்களின் ஆக்கங்கள் பெருமளவில், பத்திரிகைகளான விடிவெள்ளி, நவமணி மற்றும் தினமின பத்திரிகைகளிலும் வலைத்தளங்களான யாழ் நியூஸ், சியன நிவுஸ், லங்கா7 நிவுஸ், இம்போர்ட் மிரர் மற்றும் விடியல்.lk போன்றவற்றுக்கு அனுப்பப்பட்டு பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் அவை அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பின் முகநூல் பக்கத்தில் "வழித்தடம், පිය සටහන්, The Path" என்ற பெயர் தாங்கி ஒரு album வடிவில் மீள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வகையில் படிப் படியாக நடைபெற்று வரும் இச்செயற்றிட்டத்தின் மூலம் இதுவரை மும்மொழியிலும் நாற்பது ஆக்கங்கள் பத்திரிகைகள் மற்றும் வலைதளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் அவை மீண்டும் AUMSA வின் முகநூல் பக்கத்திலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும் எதிர்காலங்களில் பிரசுரிக்கப்படுவதற்காகவும் ஆக்கங்கள் மாணவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டும் வருகின்றன. மாணவர்களின் ஆற்றல்களை தூண்டும் இச்செயற்றிட்டமானது அனேகமானோரால் பாராட்டபட்ட ஒரு செயற்றிட்டமாக இருப்பதனாலும் வரவேற்கபட்ட ஒரு செயற்றிட்டமாக இருப்பதனாலும், எதிர்காலத்தில் தொடர்ச்சியாக இதனை மேற்கொள்வதற்கு அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது.
இச்செயற்றிட்டத்தின் மூலம் சமூகத்திற்கு ஓர் விழிப்புணர்வை வழங்குவதற்கு முடிந்துள்ளதுடன் எதிர்கால தலைவர்களான இன்றைய பட்டதாரி மாணவர்களின் கருத்துக்களையும் மும்மொழியிலும் வழங்கி சமூக முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதற்கும் இது வழியமைத்துள்ளது. தமது மனதில் எழும் கருத்துக்களை தெரிவிப்பதற்கும் அதன் மூலம் சமூகத்திற்கு ஒரு செய்தியை வழங்குவதற்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இது உதவி செய்வதோடு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் ஒருவகையில் தாக்கம் செலுத்தியுள்ளமை இதன் வெற்றியாக காணப்படுகின்றது. அத்தோடு அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமானது இதுவரை காலம் பல வெற்றியளித்த செயற்றிட்டங்களை மேற்கொண்டுள்ளதுடன் அவற்றில் பல, நீண்ட காலம் முன்னெடுத்தும் செல்லப்பட்டுள்ளன. அவ்வகையில் இச் செயற்றிட்டமும் வெற்றியளித்த மற்றும் பல மாணவர்களுக்கு கைகொடுத்த ஒரு செயற்றிட்டமாக அமைந்துள்ளது என்பது நிதர்சனமாகும். எதிர்காலத்திலும் இச்செயற்றிட்டமானது தொடரும் செயற்பாடாக இருப்பதுடன் அனைவரும் இதன் மூலம் பயன்பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஹஸீனா மவ்ஜூட்
மொறட்டுவை பல்கலைக்கழகம்
AUMSAவின் தொண்டர் குழு அங்கத்தவர்