தொடர்ச்சியான இரண்டு வாரகால பயணக்கட்டுப்பாட்டினால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவடையும் சாத்தியம் உள்ளதாக இலங்கை வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்தாளும் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தொடர்ச்சியாக 13 நாட்கள் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் தாக்கங்கள் குறித்தும், அடுத்து வரும் நாட்களில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் குறித்தும் வினவிய போதே அவர் இவற்றை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
கொரோனா வைரஸ் பரவல் சமூக பரவலாக மாற்றம் கண்டுள்ளது, அதனை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். எனினும் பரவலை கட்டுப்படுத்த தற்போது சுகாதார தரப்பினர் எடுத்துள்ள நடவடிக்கைகள் சிறந்த ஒன்றாகும்.
இப்போது தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் நிச்சயமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையும். எனவே இரண்டு வாரங்களின் பின்னர் எடுக்கும் தரவுகளை பார்க்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் ஆற்றலைக் கொண்டுள்ளது. எனவே அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களை வரவேற்க வேண்டும்.
அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிப்பதை வரவேற்பதை போன்றே மக்களும் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். தற்போதுள்ள அச்சுறுத்தல் சூழலில் மக்கள் முடிந்தவரை வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருப்பதுடன், சுகாதார வழிமுறைகளை வீடுகளிலும் பின்பற்றி எமக்கு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.
மக்களின் பாதுகாப்பை மக்களே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் மக்கள் சகல அச்சுறுத்தல்களையும் மறந்து அலட்சியமாக நடந்துகொள்கின்றனர். இதனை தவிர்க்க வேண்டும். பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இந்த இருவார காலங்களில் பெறப்படும் தரவுகளை கொண்டு அடுத்ததாக நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும் எனவும் அவர் கூறினார்.