இவ்வருடம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் க.பொ.த சாதரண தரப் பரீட்சை என்பவற்றை பிற்போடப்படுவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதத்திலும், க.பொ.த. சாதாரணப் பரீட்சை அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளபோதிலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாததன் காரணமாக இந்த இரண்டு பரீட்சைகளையும் பிற்போடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டு 200 நாட்கள் கல்வி நடவடிக்கைகள் நடத்தப்படவேண்டியிருந்தபோதும், அது 150 நாட்கள் மாத்திரமே நடத்தப்பட்டிருந்தது. எனினும், இந்த எண்ணிக்கை மேல் மாகணத்தில் 130 நாட்கள் மாத்திரமே நடத்தப்பட்டிருந்ததாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இணைய வழியூடாக பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை செயற்படுத்தப்பட்டாலுமே, நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கு அதற்கான வசதி கிடைக்காததன் காரணமாக அது வெற்றிகரமாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு மாணவர்களுக்கு முறையாக கல்வி நடவடிக்கைகளை வழங்குவதற்கு இதுவரை முடியாதுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் சிக்கல் நிலை காணப்படுவதுடன், பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதும் மேற்படி இரண்டு பரீட்சைகளை நடத்துவதற்கான திகதிகளை குறிப்பிட முடியும் என்றார்.