குற்றப்புலனாய்வு பிரிவில் ஒரு சிலருக்கும், ரிசாத் பதியுதீன் எம்.பியின் பாதுகாவல் அதிகாரிகள் ஒரு சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை பாராளுமன்ற அமர்வுகளுக்கு அனுமதிக்க முடியாதுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எம்.பியும் இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டுவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தால் அவரை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் ஆலோசனைக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
எனினும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட எம்.பி.யுமான ரிசாத் பதியுதீன் நேற்று சபைக்கு அழைத்து வரப்படவில்லை. இது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் எம்.பி.யுமான லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கேள்வி எழுப்பினார். அது தொடர்பில் ஆராய்வதாக சபாநாயகர் கூறினார்.
அதன் பின்னரும் ரிசாத் பதியுதீன் சபைக்கு அழைத்து வரப்படவில்லை. இந்நிலையில் எழுந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான முஜிபுர் ரஹ்மான் ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.
அதில் அவர், கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட எம்.பி.யுமான ரிசாத் பதியுதீன் சபைக்கு அழைத்து வரப்படுவார் எனக்கூறப்பட்டது. ஆனால் அழைத்து வரப்படவில்லை. இது தொடர்பில் காலையில் கேட்கப்பட்டபோது சபாநாயகரின் அனுமதி கிடைக்கவில்லை என குற்றப்புலனாய்வு பிரிவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சபாநாயகர் அனுமதி கொடுத்ததாக கூறப்பட்ட பின்னர் இப்போது குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவருக்கோ கொரோனா ஏற்பட்டுள்ளதால் ரிசாத் பதியுதீன் எம்.பி. யை பாராளுமன்றம் அழைத்துவர முடியவில்லையென கூறப்படுகின்றது.
இது தொடர்பில் ஆராய வேண்டும் என்றார். அப்போது சபைக்கு தலைமை தாங்கிய எம்.பி.யான ஹரினி அமரசூரிய இவ்விடயம் தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறினார்.