இலங்கையில் ஆட்சிமாற்றம் மற்றும் ஆட்சியாளர்களை மாற்றுகின்ற நடவடிக்கை தகுந்த நேரத்தில் மேற்கொள்ளப்படும் என கோட்டாபய - மஹிந்த தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை அமைக்க பெரிதும் பாடுபட்ட முன்னணி பௌத்த தேரரான முருந்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரித்துள்ளார்.
கொழும்பு - நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையில் நேற்று (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட முருந்தெட்டுவே ஆனந்த தேரர், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிகவும் பலவீனத்துடன் காணப்படுவதாக கவலை வெளியிட்டார்.
1960ஆம் ஆண்டிலிருந்து இருந்து வந்த சுகாதார அமைச்சுக்களில் தற்போது உள்ள நிர்வாகத்தைப் போன்ற பலவீனமான நிர்வாகம் இதுவரை இருக்கவில்லை. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமே இன்று சுகாதார அமைச்சையும் அரசாங்கத்தையும் ஆட்சி செய்கின்றது. அதனாலேயே இன்று நாட்டிலும் கொரோனா தொற்று உக்கிரமடைந்திருக்கின்றது.
எங்களது கேள்விகளுக்கும் ஆலோசனைகளுக்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி செவிமடுப்பதில்லை.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் கைகளில் வாள் இருந்தாலும் அது தற்போது துரு பிடித்திருக்கின்றது. அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சரின் பலவீன நிலைமையை நாங்கள் மிகவும் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
கொரோனா தொற்று கட்டுப்படுத்தும்வரை நாங்கள் பொறுமையுடன் இருக்கின்றோம். ஒருதலைப்பட்ச தீர்மானங்களை அமைச்சரும் சுகாதார அமைச்சும் தொடர்ந்தும் எடுத்துவந்தால் நாடளாவிய ரீதியிலான போராட்டங்களையும் நடத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
அரசாங்கத்தை கவிழ்த்தல் மற்றும் புதிய அரசாங்கத்தை நியமித்தல் என்கின்ற பொறுப்புக்கள் மக்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்த செயற்பாடுக்ள தகுந்த நேரத்தில் இடம்பெறும் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.