அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு செல்லும் அனைவரும் வீடுகளிலும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், பொது சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, பொதுமக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என தொற்றுநோயியல் பிரிவின் பிரதான வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை அறிக்கைகளில் சில தவறுகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், எந்தவொரு ஆய்வுகூட பரிசோதனைகளிலும் சில சமயங்களில் சிறிய அளவிலான தவறான முடிவுகள் பெறப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் தொற்றுநோயியல் பிரிவின் பிரதான வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும், PCR மற்றும் Rapid Antigen ஆகிய இரண்டு பரிசோதனைகளுக்கும் இந்த விடயம் பொருந்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக ஒரு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் ஒருவருக்கு மற்றுமொரு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, பரிசோதனை அறிக்கைகள் அவ்வாறே ஏற்கப்படுவதில்லை எனவும் கொரோனா தொற்றை உறுதி செய்வதற்கு மீண்டும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும், தொற்றுநோயியல் பிரிவின் பிரதான வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.