கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் பெற்றுக் கொடுத்துள்ள தீர்ப்பு மற்றும் திருத்தம் தொடர்பில் அரசாங்கம் உடன்படுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றின் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றிக் கொள்ள கூடியதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் குறிப்பிட்ட சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பும், விசேட பெரும்பான்மையும் அவசியம் எனவும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
குறித்த சரத்துக்களை திருத்தம் செய்ய வேண்டிய முறை தொடர்பிலும் உயர் நீதிமன்ற தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு 62 பக்கங்களை கொண்டிருந்தது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளான புவனெக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, முர்த்து பெர்ணான்டோ மற்றும் ஜனக த சில்வா ஆகியோரினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.