
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நபர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வைத்தியசாலைகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்குமாறும் அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குமாறும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இவ்வாறு வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்க முன்வருமாறு இராஜாங்க அமைச்சர் விடுத்திருந்த கோரிக்கைக்கு ஏற்ப உதவ முன்வந்தவர்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆனால் அமைச்சர் இவ்வாறு கோரிக்கை விடுத்ததன் பின்னர் அதனை அடிப்படையாகக் கொண்டு அவரது பெயரை பயன்படுத்தி சிலர் போலியாக இவ்வாறான கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
'ஸ்ரீலங்கா யுனேடட்' (Sri lanka Unites) என்ற டுவிட்டர் தளத்தில் சில மருத்துவ உபகரணங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவற்றை கொள்வனவு செய்வதற்காக நிதியுதவியளிக்குமாறு இராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அது போலியான செய்தியாகும் என்று அமைச்சு அறிவிக்கிறது. எனவே இவ்வாறான செய்திகள் தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றார்.