2020ஆம் ஆண்டு இடம்பெற்று முடிந்த கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சை பெறுபேறுகளை பாடசாலை அதிபர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்கள் பரீட்சை பெறுபேறுகளை இணையவழி முறைமை ஊடாக தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ள தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தமது பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்தார்.
பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பரீட்சை பெறுபேகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுக் கொண்ட மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்காது.
நிலைகள் அறிவிக்கப்படும் போது பெரும்பாலான மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவதால். உளவியல் ஆலோசனை சபையின் பரிந்துரைக்கமைய 2019ஆம் ஆண்டு எடுத்த தீர்மானத்துக்கு அமைய செயற்படுத்தப்படுகிறது.
அதற்கமைய பரீட்சைகள் சான்று பரீட்சைகளாக மாத்திரமே கருதப்படும் என்பதுடன் இது முதலாவது இரண்டாவது இடங்களைப் பிடித்தவர்களை தெரிவு செய்யும் பரீட்சை இல்லை என்றும் மாவட்டம் மற்றும் அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்புடுவதானது பல்கலைக்கழக அனுமதிக்காக மாத்திரம் என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள பாரிய போட்டித்தன்மையானது பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி கிடைக்கும் மாணவர்களைப் போல கிடைக்காத மாணவர்களுக்கும் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைகழகத்துக்கு தெரிவாகாத மாணவர்களின் அடுத்தக்கட்ட கற்றல் நடவடிக்கை குறித்து திறன்விருத்தி அமைச்சு மட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பெறுபேறுகள் மீள் பரிசீலனைக்காக பாடசாலைகள் ஊடாக அனுப்பவும் தனிப்பட்ட பரிட்சார்த்திகள் தனிப்பட்ட ரீதியில் விண்ணப்பிக்கவும் வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். அது குறித்து எதிர்வரும் நாள்களில் பத்திரிகைகள் வாயிலாக அறிவிக்கப்படும் என்றார்.