நீதி அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் இது தொடர்பிலான வேண்டுகோள் விடுக்கப்பட்டு, மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை YMMA பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி தெரிவித்துள்ளார்.
ஐந்து நேரத் தொழுகைகள் மற்றும தராவீஹ், வித்ர் தொழுகைகள் உள்ளிட்ட இரவு நேரத் தொழுகைகள், விசேட துஆப் பிரார்த்தனைகள், ஸஹர் மற்றும் இப்தார் நிகழ்வுகளுக்கான ஒழுங்குகள் போன்றவற்றை மேற்கொள்ளுமாறே, குறித்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தேசியத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
"சிறைக் கைதிகளும் மனிதர்களே" என்ற மனிதாபிமான அடிப்படையில், முன்னைய ரமழான் காலங்களில், இவ்வாறான ரமழான் சிறப்பு நிகழ்வுகள் மற்றும் பல்வேறு வசதிகள், விளக்கமறியலிலும், ஏனைய சிறையில் உள்ள கைதிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தன.
ஆனால், இம்முறை ரமழானில் அவ்வாறான வசதி வாய்ப்புக்கள் எதுவும் வழங்கப்படவில்லை என சிறைக் கைதிகளின் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ரமழான் மாத காலப் பகுதியில் முஸ்லிம் கைதிகளுக்கு அவர்களது மதக் கடமைகளைச் சரிவரச் செய்வதற்கான வசதி வாய்ப்புக்களை ஒழுங்குபடுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, மிகவும் பணிவன்புடன் வேண்டிக் கொள்வதாகவும், குறித்த மகஜரில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-ஐ.ஏ. காதிர் கான்