கரீபியன் தீவான செயிண்ட் வின்சென்டில் உள்ள சுபீயேர் எரிமலை வெடித்துள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
எரிமலை சீற்றத்தால் செயிண்ட் வின்சென்ட் தீவு சாம்பல் மற்றும் புகையில் மூடப்பட்டுள்ளது.
பல தசாப்த காலங்களாக செயலற்றிருந்த குறித்த எரிமலையில் இருந்து முதலில் டிசம்பரில் எரிமலை வெடிக்க ஆரம்பித்ததாகவும், தற்போது வெடிப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், புகை மற்றும் சாம்பல் வெளியேறி வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த எரிமலையில் இருந்து வெளியேறும் புகை சுமார் 6 கிலோமீற்றர் வரை பரவியுள்ளது.
இதன் காரணமாக 4,000 அடி உயரமான குறித்த எரிமலைக்கு அண்டி பகுதிகளில் வசித்து வந்த சுமார் 16,000 பேரை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையை அந்த நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எரிமலையிலிருந்து 20 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள சர்வதேச விமான நிலையம் வரை சாம்பல் பரவியுள்ளதாக செயின்ட் வின்சென்ட் தீவின் தேசிய அவசரநிலை முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
1979 ஆம் ஆண்டு முதல் எரிமலை செயலற்ற நிலையில் இருந்தது, ஆனால் கடந்த டிசம்பரில் அது நீராவி மற்றும் புகையைத் தூண்டத் தொடங்கியதோடு வெடிக்கும் சத்தத்தை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.