53 பேருடன் காணாமல்போன இந்தோனேஷிய நீர்மூழ்கிக் கப்பல், உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்த 53 பேரும் உயிரிழந்துள்ளனர் எனவும் இந்தோனேஷிய அதிகாரிகள் இன்று (25) அறிவித்துள்ளனர்.
இந்தோனேஷிய கடற்படையின் KRI Nanggala 402 எனும் நீர்மூழ்கி கடந்த புதன்கிழமை காலை, பாலி தீவிலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் மாயமானது.
அந்நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள ஒக்ஸிஜன் அதில் உள்ளரவ்களுக்கு நேற்று சனிக்கிழமை அதிகாலை 3.00 மணிவரையே போதுமானது என கடற்படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதற்கு முன்னர் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ளவர்களை மீட்பதற்காக தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
எனினும் அம்முயற்சி தோல்வியடைந்தது.இந்நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய கடற்படை அதிகரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்,
இதனால் இந்நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கிவிட்டதாக கருதப்படுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்ட மேற்படி பொருட்கள் மற்றொரு கடற்கலத்தினுடையவையாக இருக்க வாய்ப்பில்லை எனவும் இந்தோனேஷிய கடற்படைத் தளபதி யுதோ மார்கோனா நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மேற்படி நீர்மூழ்கி 3 துண்டுகளாக உடைந்துள்ளதாக இந்தோனேஷிய கடற்படைத் தளபதி யுதோ மார்கோனா இன்று தெரிவித்துள்ளார்.
இந்நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 53 பேரும் உயிரிழந்துவிட்டனர் என இந்தோனேஷிய பாதுகாப்புப் படைகளின் தளபதி ஹாதி ஜாஜான்டோ தெரிவித்துள்ளார்.
800 மீற்றர் (2600 அடி) ஆழத்திலிருந்து இந்நீர்மூழ்கியின் சமிஞ்சை இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சிங்கப்பூரிலிருந்து கிடைத்த நீர்மூழ்கி மீட்பு வாகனம் ஒன்றைப் பயன்படுத்தி இச்சமிக்ஞை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.