கண்டியில் அமைந்துள்ள குட் ஷெட் முனையத்தை மேன்படுத்தும் கண்டி மல்டிமாடல் போக்குவரத்து முனைய மேம்பாட்டு (Kandy Multimodal Transport Terminal Development Project) திட்டத்திற்காக இலங்கை அரசும் உலக வங்கியும் 69.33 மில்லியன் டாலர்கள் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
கண்டி நகர மையத்தில் அமைந்துள்ள மற்றும் ரயில் நிலையத்திற்கு அணுகலை வழங்கும், நவீனமயமாக்கப்பட்ட இந்த முனையம், ரயில், பஸ், முச்சக்கர வண்டி மற்றும் பாதசாரி போக்குவரத்தை ஒருங்கிணைத்து பாதுகாப்பானதாகவும், திறன்மிக்கதாகவும் அமையப்பெறவுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் சஜித் அட்டிகல்லே மற்றும் மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் இயக்குநர் ஃபரிஸ் எச். ஹதாத்-செர்வோஸ் ஆகியோர் முறையே அரசாங்கம் மற்றும் உலக வங்கி சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மேலும் இத்திட்டத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் செயல்படுத்தும். இதன் மொத்த திட்ட செலவு 69.33 மில்லியன் டாலர்கள் ஆகும், இதில் சர்வதேச அபிவிருத்தி சங்கம் (IDA) சலுகைக் கடனாக 64.33 மில்லியனுடன் 30 ஆண்டுகள் முதிர்வு மற்றும் 5 ஆண்டு கால மீளச்செலுத்தும் அவகாசம் வழங்கப்படும். மீதமுள்ள 5 மில்லியன் சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் சலுகை அல்லாத கடன் மூலம் 10 ஆண்டுகள் முதிர்வு மற்றும் 5 ஆண்டு மீளச்செலுத்தும் கால அவகாசத்துடன் வழங்கப்படுகிறது.
-எம்.எம் அஹமட்