எம்.எம் அஹமட்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை விசாரணை செய்ய குற்றவியல் புலனாய்வுத் துறை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) விதிகளின் கீழ் 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவியது என்ற குற்றச்சாட்டில் அவர்கள் இருவரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி. அஜித் ரோஹன செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
தற்போதைய 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு முடிந்ததும் மேலதிகமாக 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவை பெரும் முயற்சி அவர்களை விசாரிக்கும் அதிகாரிகளால் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், ரிஷாட் பதியுதீன் மற்றும் ரியாஜ் பதியுடீன் சார்பில் ஒரு சட்ட அறிக்கையை வெளியிட்டுள்ள சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்திடம் அவர்களுக்கும் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தியர்வர்களுக்கு உதவியதாக எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
"அவர்கள் இருவருக்கும் சிஐடியினர் அழைப்பு விடுத்திருந்தால், அவர்கள் கடந்த காலங்களில் அவர்கள் பலமுறை செய்ததைப் போல சிஐடியில் ஆஜர் ஆகியிருப்பார்கள், அதைவிட்டுவிட்டு வீட்டில் இருக்கும் குடும்பத்தினரை அச்சம் ஊட்டும் வகையில் நடந்துகொண்டு அவர்களை நடுநிசியில் வீட்டினுள் புகுந்து கைது செய்ய வேண்டிய அவசியமில்லை.
கைது செய்யப்பட்ட நேரத்தில் கைது செய்யப்படுவதற்கான காரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. கைது செய்யப்படும் நபர்களுக்கு அந்நேரத்தில் கைது செய்யப்படுவதற்கான காரணங்கள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும் அல்லது அப்பாவித்தனத்தை அனுமானிக்கும் கொள்கையை நிலைநிறுத்த வேண்டும். இந்த சட்டம் மீறும் செயலை ஜனநாயக அரசை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் செய்துள்ளார்கள் என என்னும் போது நாங்கள் அதிர்ச்சியடைகிறோம்.
தற்போதைய உச்சநீதிமன்றத்தின் நீதிபதி தலைமையிலான ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஆணையம், அவர்கள் இருவர் மீதும் சுமத்தப்பட்ட அனைத்து புகார்களையும் குற்றச்சாட்டுகளையும் ஏற்கனவே விசாரணை செய்துள்ளது. மேலும் அவர்கள் மீது அளிக்கப்பட்ட புகார்களின் புலனாய்வாளர்கள் மற்றும் பலரின் ஆதாரங்களை கூட பதிவு செய்திருந்தனர். தற்கொலை குண்டுவீச்சுக்கு உதவியது என்ற குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் அவர்கள் நன்கறித்திருந்தனர்.
இந்நிலையில், எந்தவொரு நியாயமான ஆதாரமும் அற்ற நிலையில் அவர்கள் கைது செய்யப்படுவது சட்டத்தின் விதிமுறையை மீறுவதாகும்.
மேலும் இந்த கைதானது அரசியல் நோக்கம் கொண்டது என்று நாம் இந்த அரசுக்கு அறிவுறுத்துகிறோம்.
கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் தற்போதைய எதிர்க்கட்சியை ACMC ஆதரித்தது. ACMC இன்று நாட்டின் எதிர்க்கட்சியின் ஒரு பாகமாகும். மேலும் ACMC பிரதான முஸ்லீம் சமூகத்தினை பிரநிதித்துவப்படுத்துகிறது.
வெளிநாட்டு சக்திகளால் பகடைக் காய்களாக பயன்படுத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட ஒரு சில முஸ்லீம் இளைஞர்களின் மோசமான செயல்களுக்காக எவ்வித சம்பந்தமும் இல்லாத முஸ்லிம்களின் அரசியல் தலைமையை தண்டிப்பதற்கான ஒரு இனரீதியான பழிவாங்கும் செயலே இது" என சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)