ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை இனங்காண்பதில் அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்காக, ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை பிரதான சூத்திரதாரியாக அறிவித்துள்ளனர்.
நௌபர் மௌலவி ஸஹ்ரானின் சகாவாக இருந்துள்ளாரே தவிர எந்தச் சந்தர்ப்பத்திலும் ஸஹ்ரானின் தலைவராக செயற்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேககா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (09) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எதிர்க்கட்சி மீது பழிசுமத்துவதை தவிர்த்து அதன் பிரதான சூத்திரதாரியை இனங்காண்பதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது. அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்காக கைது செய்யப்பட்டுள்ள ஒரு நபரை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அறிவித்துள்ளனர் என்றார்.