யாழ்.மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ். நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது 2 இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அத்துடன் குறித்த வழக்கு ஜுன் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
யாழ்.மாநகர சபையினால் மாநகரத்தின் தூய்மையை பேண உருவாக்கப்பட்ட குழுவின் சீருடை, தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடை என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று (08) வாக்குமூலம் வழங்க வருமாறு முதல்வர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டார். பொலிஸ் நிலையத்தில் சுமார் 6 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் விசாரணைகளின் பின்னர் இன்றிரவு (09) யாழ்ப்பாண நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் தண்டனை சட்டக்கோவை பிரிவின் கீழ் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதன்போது இரண்டு இலட்ச ரூபா ஆட்பிணையில் விடுவித்த நீதிவான் வழக்கை வழக்கு ஜுன் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். மணிவண்ணன் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் 25 சட்டத்தரணிகளுக்கு மேல் முன்னிலையானர்கள்.
-மயூரன்