ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சூத்திரதாரி நௌபர் மௌலவி என்று பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அளித்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தலைமை எதிர்க்கட்சி விப் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
"தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஆணைக்குழு முன்னிலையில் நௌபர் மௌலவி ஒருபோதும் ஆஜர்படுத்தப்படவில்லை, எனவே அவரது பெயர் திடீரென எப்படி வரும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
"ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கையில் சஹ்ரான் ஹாஷிமுக்கு சம்பளம் வழங்கியது குறித்து எதையும் குறிப்பிட ஏன் தவறிவிட்டது?, அதேபோன்று இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சாரா புலஸ்தீனி என்பவரை ஒப்படைக்க அரசாங்கம் ஏன் தவறிவிட்டது?" என்றும் கேள்விகளை எழுப்பினார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சஹ்ரானை கைது செய்ய டி.ஐ.ஜி. நாலக்க சில்வாவின் முயற்சி தடுக்கப்பட்டது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும் நௌபர் மௌலவி சூத்திரதாரி என்று கூறுவது தவறானது என எம்.பி ரவூப் ஹக்கீம் கூறினார்.
"மத்திய கிழக்கு நாடுகளை சீர்குலைக்க மேற்கு நாடுகளால் உருவாக்கப்பட்ட நாட்டினை ஒருவர் அறிந்திருந்தால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான சூத்திரதாரி யார் என்பதைக் கண்டுபிடிப்பது எளிதானது," என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் "ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்தியவர்களில் சிலர் வடகிழக்கு மோதலின் போது தகவல் அறிவதற்காக இராணுவத்தினரால் பணியமர்த்தப்பட்டவர்கள்." என்றார்.
-எம்.எம் அஹமட்