நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பள்ளிவாசல்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சகல பள்ளிவாசல்களிலும் தராவீஹ் மற்றும் ஜும்ஆ தொழுகை உள்ளிட்ட ஏனைய கூட்டுப் பிராத்தனை நிகழ்வுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐவேளை தொழுகை நேரங்களில், பள்ளிவாசல்களில் அதிகபட்சம் 25 பேர் மாத்திரமே இருக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தொழுகைக்காக வருகை தரும் சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட விரிப்புகளை கொண்டுவருமாறும், வீடுகளிலேயே வுழூ செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், பள்ளிவாசல்கள் மூடப்பட வேண்டும் எனவும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினாலும், வக்ப் சபையினாலும் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள், கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயங்களை பின்பற்றுவதற்கு, நடைமுறை சிக்கல்கள் காணப்படுமாயின், பள்ளிவாசல்களை மூடுவதற்கு உரிய நிர்வாகத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.