ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை கைது செய்யப்பட மாட்டார் என சட்ட மா அதிபர் இன்று (30) உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.
தன்னைக் கைது செய்வதை தடுத்து உத்தரவிடக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நாவான இதனை அறிவித்தார்.
சட்டத்தரணி சனத் விஜயவர்தனவின் ஊடாக குறித்த மனுவினை தாக்கல் செய்துள்ள ஹரீன் பெர்ணான்டோ, மனுவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டுள்ளார்.
தான் வெளிப்படுத்திய சில விடயங்களை மையப்படுத்தி, பொய்யான குற்றச்சாட்டுக்களின் கீழ் தன்னை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாகவும், இதனால் அரசியலமைப்பு ஊடாக வழங்கப்பட்டுள்ள தனது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக ஹரீன் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.