2021ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகிப் போட்டியில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் இன்று (08) கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இருவரும் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் இடம்பெற்ற திருமதி இலங்கை அழகி போட்டியில் புஷ்பிகாவுக்கு முடிசூட்டப்பட்டு சிறிது நேரத்தில் ஜூரி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதாவது, வெற்றியாளர் விவாகரத்து செய்யப்பட்டவர். அத்தகைய ஒருவர் இதில் போட்டியிட முடியாது. எனவே இரண்டாவது வெற்றியாளர், முதலாவது வெற்றியாளராக தெரிவு செய்யப்படுகிறார் என அறிவித்தார்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்ததுடன் பாதிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா, தான் விவாகரத்தானவர் இல்லை என அறிவித்ததுடன் பொலிஸிலும் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே ஜூரி மற்றும் சுலா பத்மேந்திர ஆகிய இருவரும் இன்று காலை கறுவாத்தோட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.