இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் இரு கைக்குண்டுகள் செயலிழந்த நிலையில் வவுனியாவில் மீட்கப்பட்டுள்ளது.
ஈரப்பெரியகுளம், நவகமுவ பகுதியில் வைத்து குறித்த இரு கைக்குண்டுகளும் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் மழை காரணமாக மண் அரித்துச் செல்லப்பட்ட இடத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்பட்டதையடுத்து ஈரப்பெரியகுளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட இரு கைக்குண்டுகளும் இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுகின்ற Mills 36 வகையை சேர்ந்த கைக்குண்டுகள் எனவும், அவை செயலிழந்து காணப்பட்டமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அந்த பகுதியில் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று தேடுதல் நடத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.