தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு புறப்பட்டுச் செல்லும் பொதுமக்களுக்காக கடந்த 09ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகளை மீண்டும் நாளை 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
புத்தாண்டுக்கு தங்களது சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நகரங்களுக்கு வருவதற்காக மேற்கொண்டுள்ள போக்குவரத்து சேவை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தனது சொந்த இடங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்காக கடந்த 9ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் 13ஆம் திகதிவரை இடம்பெற்றன.
இதன்போது கொழும்பு மற்றும் பிரதான நகரங்களில் இருந்து நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் போதுமானளவு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் 24மணி நேரம் சேவையை மேற்கொண்டிருந்தது.
இதனால் புத்தாண்டு சமயத்தில் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு சிரமமின்றி செல்வதற்கு வசதியாக இருந்தது. அத்துடன் புத்தாண்டு தினத்திலும் மக்களின் போக்குவரத்து தேவைக்காக போதுமானளவு பஸ் சேவைகள் இடம்பெற்றன.
அதேபோன்று புத்தாண்டுக்காக சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் அலுவலக இடங்களுக்கு திரும்புவதற்காக விசேட பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து சேவையை ஆரம்பித்திருக்கிறோம். நாளை 15ஆம் திகதி முதல் எதிர்வரும் 19ஆம் திகதிவரை இந்த விசேட போக்குவரத்து சேவை இடம்பெறும் என்றார்.