53 பேருடன் காணாமல் போயிருந்த இந்தோனேஷிய நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய கடற்படை இன்று தெரிவித்துள்ளது. இதனால், இந்நீர்மூழ்கிக் கப்பல் கடலடியில் மூழ்கி சிதைவடைந்துள்ளதாக கருதப்படுகிறது.
இந்தோனேஷிய கடற்படையின் KRI Nanggala 402 எனும் நீர்மூழ்கி கடந்த புதன்கிழமை காலை, பாலி தீவிலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் காணாமல் போனது.
அந்நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள ஒக்ஸிஜன் அதில் உள்ளவர்களுக்கு இன்று அதிகாலை 3.00 மணிவரையே போதுமானது என கடற்படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதற்கு முன்னர் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ளவர்களை மீட்பதற்காக தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
எனினும் அந்த காலை எல்லை கடந்து பல மணித்தியாலங்களாகி விட்டது.
இந்நிலையில், இந்நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய கடற்படை அதிகரிகள் இன்று தெரிவித்துள்ளனர்,
யுத்தக் கப்பல்கள், விமானங்கள் சகிதம் நூற்றுக்கணக்கான படையினர் இத்தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நீர்மூழ்கிக் கப்பலின் உட்புறத்திலுள்ள பொருட்களின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, இதனால் இந்நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கி விட்டதாக கருதப்படுவதாகவும் இந்தோனேஷிய கடற்படைத் தளபதி யுதோ மார்கோனா தெரிவித்துள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட மேற்படி பொருட்கள் மற்றொரு கடற்கலத்தினுடையவையாக இருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.