
தன்னை கடத்திச் சென்று தாக்கி சிப் (CHIP) ஒன்றை கேட்டதாக ஊடகவியலாளர் ஒருவர் வழங்கிய முறைப்பாடு முற்றிலும் போலியானது என நீண்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் வீட்டில் இருந்த மேசன் கரண்டியால் தன்னை தானே காயப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த ஊடகவியலாளர் விசாரணைகளின் பின்னர் அனுப்பி வைக்கப்பட்ட சமயம், நேரடியாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனான சதுர சேனாரத்னவின் திம்பிரிகஸ்யாய பகுதியில் இருக்கும் காரியாலயத்துக்கு சென்று சுமார் 3 மணி நேரம் அங்கு இருந்துவிட்டு வெளியாகும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக பெயர் குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் சதுர சேனாரத்ன ஆகியோரிடம் இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.