
இராணுவத்தில் சேவையாற்றிய போது படைகளுக்கு கட்டளையிட்டதைப் போன்று நாட்டை நிர்வகிக்க முடியாது என்று அமைச்சர் சரத் வீரசேகரவிடம் தெரிவிக்க விரும்புகின்றோம். மேலும் மதரஸா பாடசாலைகள் என்றால் என்ன என்பதை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மதரஸா பாடசாலைகளை தடை செய்ய வேண்டும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இராணுவத்தின் சேவையாற்றிய போது படைகளுக்கு கட்டளையிட்டதைப் போன்று நாட்டை ஆட்சி செய்ய முடியாது என அவரிடம் தெரிவிக்க விரும்புகின்றோம். மதரஸா பாடசாலைகள் என்றால் என்ன என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மதரஸா பாடசாலைகள் என்பது ஏனைய மதங்களில் காணப்படும் அறநெறி பாடசாலைகளை ஒத்ததாகும். எனவே ஒவ்வொருவரின் தேவைக்கமைய இவற்றை தடை செய்ய முடியாது. ஒரு சிலரது தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் கற்பித்தலை முன்னெடுத்தல் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் இதனை கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து மதகல்வி தொடர்பான சட்டத்தை உருவாக்கி கற்பித்தல் முறைமை ஒழுங்குபடுத்த வேண்டும்.
அவ்வாறில்லாமல் தடை செய்ய அவசியமற்ற விடயங்களை தடை செய்யப்பட வேண்டும் என்று கூறுவது அநாவசியமான விடயமாகும். இவை வெறுக்கத்தக்க பேச்சுக்களாகும் என்பதே எனது நிலைப்பாடாகும். மதரஸா பாடசாலைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பில் யாராலும் குற்றஞ்சுமத்த முடியாது என்பதை நாம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளோம்.
எனவே அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக மக்கள் மத்தியில் பிரச்சினைகளை தோற்றுவிக்க யாருக்கும் இடமளிக்க முடியாது என்பதை அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு நினைவுபடுத்துகின்றோம் என்றார்.
-எம்.மனோசித்ரா