வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாடு திரும்பும்போது, அவர்களுக்கு தனிமைப்படுத்தல் வசதிகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் இன்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை கூறியுள்ளார்.
அத்துடன், இந்த செயற்பாட்டுக்காக 10 ஹோட்டல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்மைய, குறித்த ஹோட்டல்களில் 07 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் அறவிடப்படமாட்டாது என, அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாட்டில் இருந்து அழைத்துவரப்படும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்தல் வசதிகளை வழங்கும் விடயத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் பல்வேறு நாடுகளில் இருந்து 53 ஆயிரம் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்துவர முடிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.