பன்னிப்பிட்டியவில் லொறி சாரதி ஒருவரை தாக்கிய பொலிஸ் உத்தியோக்கத்தரை சேவையிலிருந்து இடைநிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
இதேவேளை, பன்னிப்பிட்டியவில் லொறி சாரதி ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரினால் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பன்னிப்பிட்டியவில் லொறி சாரதி ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் இன்று காலை தாக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது.
மஹரகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவரே அவர் என, விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், லொறி சாரதியை தாக்கிய குறித்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொலிஸார் தமது சீருடையுடன் கடமையில் இருக்கும் போது இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.