அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நல்லாட்சியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டமை குறித்து பாரிய சந்தேகம் காணப்படுகின்றது.
தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னரே அத்தீர்ப்பு தொடர்பில் அரசியல்வாதிகள் கலந்துரையாடியுள்ளமை தெரியவந்துள்ளது என்றார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசியல் காரணிகளையும் தனிப்பட்ட பழிவாங்கல்களையும் அடிப்படையாகக் கொண்டே மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் காணப்படுகிறது.
இந்நிலையில், துமிந்த சில்வாவுக்கான தீர்ப்பை மீள்பரிசீலனை செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.