கொஹூவளை பகுதியில் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் தொடர்பில் கல்கிசை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் இரு விசேட விசாரணைக்குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
கொஹூவலை – ஆசிரிமாவத்தை பகுதியில் தீக்கிரையான நிலையில் நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து மீட்கப்பட்ட சடலம், கலுபோவிலை பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் நசார் மொஹம்மட் நஸீர் எனப்படும் 34 வயதுடைய வர்த்தகருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த வர்த்தகர், நேற்று (10) புதன்கிழமை இரவு 11 மணியளவில் கொஹூவளை பகுதியில் உணவகம் ஒன்றில் உணவு உட்கொண்டு விட்டு மீண்டும் காரில் ஏறி புறப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் காரும் தீக்கரையாகியுள்ளதுடன், இந்த தீப்பரவலில் சிக்கி வர்த்தகரும் உயிரிழந்துள்ளார்.
எரியுண்ட வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 1.5 லீற்றர் பெட்ரோல் குறித்து அரசாங்க பகுப்பாய்வாளர் அதிக கவனம் செலுத்துவதாக குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி கூறினார்.
இந்நிலையில், கல்கிசை பதில் நீதிவான் ஸ்தல பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், அரச இரசாயன பரிசோதகர் மற்றுமும் சட்ட வைத்திய அதிகாரியும் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்போது தீப்பரவல் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பிலும் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
$ads={1}
சடலம் தொடர்பான மரண மற்றும் பிரேத பரிசோதனைகள் கலுபோவில வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளன. இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹூவலை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், கல்கிசை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் இரு விசேட விசாரணைகுழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.