அமெரிக்காவுடனான எம்.சி.சி உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடப்போவதில்லை என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான எம்.சி.சி உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடுவதை தடுப்பதற்கான இடைக்கால தடை உத்தரவிட கோரி அரச வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்துள்ள மனு நீதிபதிகளான ப்ரீதி பத்மன் சூரசேன காமினி அமரசேகர ஏ எச்.எம்.டீ நவாஸ் ஆகியோர் முன்னிலையில் உயர்நீதிமன்றில் நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அமெரிக்காவுடனான மிலேனியம் செலேன்ஜ் கோப்பரேஷன் திட்டத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை என சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையாகியிருந்த மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் பர்சானா ஜமீல் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பான தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அமெரிக்காவுடனான சோபா உடன்படிக்கை தொடர்பிலும் அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் பர்சானா ஜமீல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த மனுமீதான விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் அன்றைய தினம் எழுத்துப்பூர்வ அறிக்கையினை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.