மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது குறித்த தடை விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதை தடை செய்யும் அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதனை இலங்கையில் தடை செய்வது குறித்த புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்வதற்கான சட்ட வரைவு குறித்து சட்ட மா அதிபருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக பௌத்த சாசன, கலாச்சார மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சில மாதங்களில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவது தடை செய்யப்பட்ட போதிலும் மாட்டிறைச்சி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவது தடை செய்வதன் மூலம் பாற்பண்னையாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
வயது முதிர்ந்த மாடுகளை ஏற்றுமதி செய்யும் திட்டமும் உள்ளதாகவும், இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதனை தொழிலாளக் கொண்டவர்களுக்கு இந்த தடையினால் ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புக்களுக்கு எவ்வாறு தீர்வு வழங்குவது என்பது குறித்து இன்னும் யோசனைகள் முன்வைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.