அரச கருமமொழிகள் திணைக்களத்தினால் 2007, 26ம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரத்துக்குட்பட்டு அரச அலுவலகர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிக் கற்கைநெறிகள் அரசாங்க சுற்றறிக்கைகளுக்கமைவாக தமிழ் பேசும் அரச அலுவலகர்களுக்கு சிங்களமொழிப் பாடநெறியும், சிங்கள மொழி பேசும் அரச அலுவலகர்களுக்கு தமிழ்மொழிப் பாடநெறியும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இவ்வாறான பாடநெறிகள் பொலன்னறுவை மாவட்டத்தில் பல அலுவலகங்களிலும் திணைக்களங்களிலும் நடைபெற்று வரும் நிலையில், இன்று 2021.03.21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இதற்கான ஆரம்ப நிகழ்வு பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல பிரதேசத்திற்குட்பட்ட அரலகங்வில விலயாய தேசிய பாடசாலையின் ஆசிரியை D.சாமினி தயாசேனவின் நெறிப்படுத்தலில் பாடசாலையின் முதல்வர் HG.பிரியந்தகுமாரவின் தலைமையில் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
நாட்டின் நிர்வாகத்துறையினைச் சிறப்பாக முன்னெடுக்கும் வகையிலும், சகல இன மக்களிடத்திலும் மொழி வழியிலான சமாதானம், ஐக்கியம், இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் வகையிலும் அரச உத்தியோகத்தர்களை இரு மொழிப்பயன்பாட்டிற்கு தேர்ச்சி பெறச்செய்யும் நோக்கில் தமிழ் பேசும் அரச ஊழியர்களுக்கு சிங்களமொழிப் பாடநெறியும், சிங்களமொழி பேசும் அரச ஊழியர்களுக்கு தமிழ்மொழிப் பாடநெறியும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இப்பயிற்சிநெறிக்கு வளவாளராக ஏறாவூரை சேர்ந்த, அரச கரும மொழிகள் திணைக்களத்தின் போதனாசிரியரும் காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் கடமையாற்றும் இரண்டாம் மொழி ஆசிரியருமான M.M.செய்னுதீன் கலந்துகொண்டு பாடநெறிகளை ஆரம்பித்து வைத்தார்.
-ஏறாவூர் நஸீர்